×

சித்துராஜபுரத்தில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும்: மக்கள் கோரிக்கை

 

சிவகாசி, டிச.22: சிவகாசி அருகே சித்துராஜபுரம் ஆதிதிராவிடர் காலனியில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள், திருமணம், பிறந்த நாள், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த இந்த பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லை. இதனால், தனியார் மண்டபங்களில் அதிகம் பணம் செலவழித்து விழாக்களை நடத்த வேண்டியுள்ளது.

இந்த பகுதியில் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும் என கடந்த 2 வருடமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது இதே கோரிக்கையை இப்பகுதி மக்கள் முன் வைத்தனர். ஆனால் ஆதிதிராவிடர் காலனியில் சமுதாய கூடம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலை உள்ளது.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதி சுப்புராஜ் கூறும்போது, ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 10 சென்ட் நிலத்தில் சமுதாய கூடம் அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் மேய்ச்சல் புறம்போக்காக உள்ளது. இதனை நத்தம் புறம்போக்காக மாற்றி தர கோரி மாவட்ட நிர்வாகத்திடமும், தாலுகா அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊர் மக்கள் பங்களிப்புடன் சமுதாய கூடம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post சித்துராஜபுரத்தில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும்: மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chitturajapuram ,Sivakasi ,Chithurajapuram Adi Dravidar Colony ,Chithurajapuram ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு...